

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்துக்கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சேர்ந்த வெற்றிமாறனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் தான் போட்டியிடுவதை சிலர் திட்டமிட்டே தடுத்துவிட்டனர் என்று அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளாமல் அது குறித்து உண்மைநிலை அறிய தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை'க்கு ஆணையிட வேண்டும். அத்துடன், அவ்விசாரணையின் முடிவு வரும் வரை அவ்வூராட்சிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.