

சென்னை,
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் நகல் கோரி 67 ஆயிரத்து 812 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 51 ஆயிரத்து 720 ஆக இருந்தது. விடைத்தாள் நகலுக்காக விண்ணப்பித்தவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் வருகிற 16-ந்தேதி வரை பாடவாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் பக்கத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான படிவத்தையும் அந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்னர் பூர்த்தி செய்த இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மறுமதிப்பீடுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.