

சென்னை,
தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்து மக்கள் கட்சி சார்பில், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருந்த தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, திமுக அரசு தடை விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஒரு அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது, விளம்பரங்களை அகற்றுவது, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை கேள்விக்குறியாக்குகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள், காவல்துறையின் முழு ஆதரவோடு, நமது நாட்டுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம், எந்தத் தடையும் இன்றி, கூட்டங்கள், பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்து சமய மக்கள் ஒற்றுமை பேரணிக்கும், உள்ளரங்கில் நடைபெறும் மாநாடு மற்றும் கருத்தரங்கம், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பது ஏன்? இந்து சமய மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிடக் கூடாது என்று அச்சப்படுகிறதா போலி மதச்சார்பின்மை பேசும் திமுக அரசு?
ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். மாற்றுக் கருத்துகளையும் மக்கள் நிகழ்ச்சிகளையும் தடுக்க முயலும் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, இந்து மக்கள் கட்சி சார்பாக நடைபெறவிருக்கும் தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.