நொடிகளில் நொறுங்கிய விமானமும், வாழ்க்கையும்


நொடிகளில் நொறுங்கிய விமானமும், வாழ்க்கையும்
x

விமான பயணம் பாதுகாப்பானதாக இருப்பதற்கு என்ஜின் கோளாறு, எரிபொருளில் மாசு, எரிபொருள் குழாயில் அடைப்பு போன்ற குறைகள் இனி இல்லாமல் இருக்க செய்யவேண்டும்.

மனித வாழ்க்கை நிலையற்றது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். நொடிப்பொழுதில் எல்லாமே முடிந்துவிடும் என்று நிரூபிக்கும் கோர சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேத்விக் விமானநிலையத்துக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட 33 நொடிகளில், தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில பத்திரிகையான 'டிடி நெக்ஸ்ட்' தலைப்பிட்டதுபோல 'டிரீம் கிராஷர்' ஆகிவிட்டது. ஆங்கிலத்தில் 'டிரீம்லைனர்' என்றால் கனவு விமானம். அது நொறுங்கிவிட்டது என்று எடுத்துக்கூறும் வகையில்தான் 'டிடி நெக்ஸ்ட்' அந்த தலைப்பை தீட்டியிருந்தது. இந்த 'டிரீம்லைனர்' விமானம் தனது சேவையை தொடங்கி 14 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது உலகம் முழுவதிலும் 1,175 'டிரீம்லைனர்' விமானங்கள் தினமும் 2,100 சேவைகளில் 100 கோடி பயணிகளை ஏற்றிக்கொண்டு விண்ணில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன. இதுவரை விபத்தே நடக்காத இந்த வகை விமானத்தில் முதல் முறையாக விபத்து நடந்திருக்கிறது.

இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் இருந்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். இங்கிலாந்தை சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர் இருந்தனர். மதியம் 1.30 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. 1.31 மணிக்கு ரன்வேயை நோக்கி மெதுவாக நகர்ந்தது. 1.34 மணிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பறக்கலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஒரு மணி 38 நிமிடம் 24 நொடிக்கு அந்த விமானத்தை விமானி அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு ரன்வேயில் இயக்கத்தொடங்கினார். சரியாக ஒரு மணி 38 நிமிடம் 40-வது நொடியில் விமானம் பறக்கத்தொடங்கியது.

அடுத்த சில நொடிகளிலேயே விமான பைலட் ஆபத்து காலத்தில் கூறப்படும் 'மேடே மேடே' என்ற ஆபத்து அலறலை தெரிவித்தார். 'மேடே' என்பது சர்வதேச அளவில் ஆபத்து நேரங்களில் கூறப்படும் வார்த்தையாகும். பிரெஞ்சு மொழியில் 'மெய்டெர்' என்றால் எங்களுக்கு உதவுங்கள் என்று அர்த்தம். அதுதான் மருவி 1920 முதல் ஆபத்து நேரங்களில் கூறப்படும் 'மேடே' என்றாகியது. இந்த 'மேடே'யை விமானி பதறிக்கொண்டே கூறும்போது விமானம் 625 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது. அடுத்த 15-வது நொடியில் அதாவது ஒரு மணி 38 நிமிடம் 55 வினாடியில் அப்படியே கீழ்நோக்கி வேகமாக இறங்கி சில நொடிகளில் சரியாக ஒரு மணி 39 நிமிடம் 13 வினாடிகளில் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த ஒருவர் மட்டும் அதிசயமாக காயங்களுடன் தப்ப, மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த கட்டிடத்தில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேரும் பலியாகினர்.

ஆகாயத்தில் பறக்கத் தொடங்கி 33 நொடிகளில் விமானம் நொறுங்கி எல்லாமே முடிந்துவிட்டது. இந்த விபத்துக்கு விமானத்தில் உள்ள இரட்டை என்ஜின் கோளாறு, என்ஜினுக்குள் பறவைகள் சிக்கி செயலிழக்க வைத்தல், எரிபொருளில் மாசு, விமானத்தில் அளவுக்கு மீறிய எடை, எரிபொருள் குழாயில் அடைப்பு என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் முழுமையான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும். காரணம் எதுவென்றாலும் விமான பயணம் பாதுகாப்பானதாக இருப்பதற்கு அதுபோன்ற குறைகள் இனி இல்லாமல் இருக்க செய்யவேண்டும்.

1 More update

Next Story