

மதுரை,
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 காவலர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. அதில், அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகி இருக்கிறது. நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்பதால் புகார் முடிக்கப்பட்டு அறிக்கை தயாராகிறது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமைக்காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்கு தொடர்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,
புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே; அவர்தானே எல்லாவற்றிற்கும் காரணம்.ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டனர். ஏதும் இல்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்.
காவல்துறையின் செயலை பார்த்தால் மனமே பதறுகிறது.அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறி விசாரணையை பிப்.17க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.