பிரதமர் மோடியின் மதுரை வருகை தேதி மாற்றம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கைகோர்த்துள்ளது.
பிரதமர் மோடியின் மதுரை வருகை தேதி மாற்றம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கைகோர்த்துள்ளது. இந்த கட்சிகள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 23-ந் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்திற்கு "இரட்டை என்ஜின் ஆட்சி தேவை" என்று பேசினார். அதாவது, அ.தி.மு.க., பா.ஜ.க.வை என்ஜின்களாக உருவகப்படுத்தி பேசினார்.

இதனால், வெகுண்டெழுந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "டப்பா என்ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது" என்று கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக, த.வெ.க. தலைவர் விஜய், கட்சியின் 3-வது ஆண்டு விழாவில் பேசும்போது, "டாப் என்ஜின் நாம் தான். தேர்தலில் நம்மை வெற்றிபெற வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்" என்று பேசினார்.

இப்படி, பிரதமர் மோடியின் 'என்ஜின்' பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில், இம்மாதம் 28-ந் தேதி (சனிக்கிழமை) மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஒரு நாள் தாமதமாக, அதாவது மார்ச் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி மதுரை வர இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com