
டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட உள்ளது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சி, முதலீட்டு, வர்த்தகம், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு, ஜிஎஸ்டி, வளர்ச்சி திட்டங்கள், ரெயில்வே திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.