தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

இது நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நேற்று முன் தினம் (20-11-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நேற்று (21-11-2025) காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (24-ஆம் தேதி) வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
தென்காசி,
தூத்துக்குடி,
ராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை,
கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






