14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா - யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது.
தொடர்ந்து இன்று அதிகாலையில், புயலாக வலுக்குறைந்து, இன்று காலை 8.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திர பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






