அதிகாலை 4 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


அதிகாலை 4 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, சென்னையில் இருந்து சுமார் 740 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மதுரை, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story