

சென்னை,
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'எல்நினோ' என்ற வானிலை நிகழ்வு காரணமாக மே மாதத்தில் விடை பெறக்கூடிய கோடை காலம் ஜூன், ஜூலை மாதங்களை கடந்து தற் போது வரை நீடித்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைத்து வருகிறது.
அந்த வகையில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர மாநிலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காற்று உள்ளே நுழைகிறது. அடர் மேகங்களும் குவியத் தொடங்கி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை அதிகம் கொடுக்கக்கூடிய மேற்கு கடற்கரையோரம் மற்றும் அரபிக்கடலோரப் பகுதிகளில் மழை தொய்வடைந்து உள்ளது. எப்போதெல்லாம் தென்மேற்கு பருவமழை தொய்வடைந்து வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வுப் பகுதி உருவாகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வெப்பச்சலன இடி மழைக்கான வாய்ப்பு சாதகமாக அமையும்.
பகல் நேரத்தில் வெப்பம், மாலை நேரத்தில் உள்ளே நுழையக் கூடிய கடல் காற்று, ஏற்கனவே இருக்கக்கூடிய தாழ்வுப்பகுதி காரணமாக இருக்கும் ஈரப்பதக் காற்று ஆகிய இந்த மூன்றும் இணைந்து தமிழ்நாட்டில் மழைக்கான சாதகமான சூழலை கொடுக்க இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பகலில் வெப்பமாக இருந்தாலும், மாலை அல்லது இரவு மற்றும் நள்ளிரவில் வலுவான இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.