

கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழையும், பிற மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் இன்று பெய்யக் கூடும்.
அதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களிலும், சில மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழை நாளை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.