

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்தே வெப்பம் தகித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. இதற்கிடையே வட தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. சென்னையை பொறுத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.