தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மாதத்துடன் (டிசம்பர்) பருவமழை நிறைவு பெற உள்ளது. இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது. 'டிட்வா' புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடிய மழை அளவுதான் வடகிழக்கு பருவமழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு. வழக்கமாக 44.1 செ.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 42.7செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை 10 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை முழுவதுமாக விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (19-01-2026) விலகியது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

22-01-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (19-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (20-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com