

புதுடெல்லி,
ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது அதிரடி தாக்குதலை மீண்டும் தொடங்கியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 80 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. குறிப்பாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை குறிவைத்து தாக்கியது. ஈரானில் 2 நாட்கள் தாக்குதல் நடத்தியதாக கூறிய அமெரிக்கா, பின்னர் அதை நிறுத்திவிட்டதாகவும் அறிவித்தது.
இருப்பினும் ஈரான் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹார்முஸ் நீரிணையை' மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டின் வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக முடியும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும். இதன் வழியே எந்தவொரு வணிகக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஸைப்ரஸ் கொடி ஏந்திய GFS Galaxy என்ற வணிகக் கப்பல் மீது இன்று காலை ஈரான் நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் மாயமாகியுள்ளார். இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஒருவரைத் தேடும் பணி நடைபெறுவதாக கூறியுள்ளது.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஓமனுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன என்றும் பதற்றத்தை உடனடியாகத் தணிக்கவும், இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.