

பெய்ஜிங்,
தென் சீன மாகாணமான குவாங்டாங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 'நௌல்' சூறாவளி கரையை கடந்ததையடுத்து, பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12-வது மற்றும் மிக வலிமையான சூறாவளியான 'நௌல்', குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்சோ (Huizhou) நகரில் அதிகாலை 3:50 மணியளவில் கரையை கடந்தது. இது அப்பகுதியின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்தது.
சீனாவின் கான்சு (Gansu) பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரண ஆணையம், குவாங்டாங் மாகாணத்திற்காக நான்காம் நிலை (Level-IV) தேசிய பேரிடர் நிவாரண அவசர நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
தென் சீனாவின் பல பகுதிகளில் கனமழையை ஏற்படுத்திய 'நௌல்' சூறாவளி குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததைத் தொடர்ந்து, இன்று அங்கு அதிவேக ரெயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்யவும், உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவவும் ஒரு பணிக்குழு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.