

ஜி-7 உச்சி மாநாடு
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ஜி-7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி மாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது. முன்னதாக உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுமாறு உலகத்தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.
100 கோடி தடுப்பூசி
இதையொட்டி நேற்று போரிஸ் ஜான்சன் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-
உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான அறிவிப்பை உலகத்தலைவர்கள் வெளியிடுவார்கள். டோஸ் பகிர்வு, நிதி உதவி அளித்தல் வாயிலாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் பலனாக எங்களது உபரி தடுப்பூசிகளில் கொஞ்சத்தை தேவைப்படுகிறவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அவ்வாறு செயல்படுகிறபோது, ஒரு தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு ஒரு பெரிய உதவி நடவடிக்கையாக இது அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, செப்டம்பர் இறுதியில் 50 லட்சம் தடுப்பூசிகளும், அடுத்த ஆண்டுக்குள் 9.5 கோடி தடுப்பூசிகளும் வழங்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த 10 கோடி தடுப்பூசிகளில் 8 சதவீதம் உலக சுகாதார நிறுவன ஆதரவிலான
கோவேக்ஸ் அமைப்பின் மூலம் தேவையுள்ள நாடுகளுக்கு வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.