

லண்டன்,
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் சதமடித்து, புதிய சாதனை படைத்து வருகிறது. இங்கிலாந்திலும் வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள், குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டவை என்பதால், ஏ.சி. வசதி இல்லாமல் வகுப்பறைகள் அனலாக மாறின.
வெப்பத்தைத் தாங்க முடியாமல் மாணவர்கள் மயங்கி விழுந்ததால், இங்கிலாந்து முழுவதும் 1.000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. திறந்திருக்கும் சில பள்ளிகளில், மதிய உணவிற்குப் பதிலாக மாணவர்களுக்கு ஐஸ் கிரீம்கள் மற்றும் சாலட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து குளிர்வித்து வருகின்றனர். சிலர் வகுப்பறைக்குள் குளிர்ந்த நீர் வாளிக்குள் கால்களை வைத்து படித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்து இன்னும் தயாராகவில்லை என்பதை இந்த அவலநிலை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.