சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி, 20 க்கும் மேற்பட்டோர் காயம்

சோமாலியாவில் உள்ள சொகுசு ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி, 20 க்கும் மேற்பட்டோர் காயம்
Published on

மொகடிசு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சோமாலியா. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷாபாப் இயக்கத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

ஓட்டலில் துப்பாக்கிச்சூடும் மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. அருகாமை பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், ஓட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். 4 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு ஓட்டலை பாதுகாப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர், ஒரு காவல் துறை அதிகாரி என மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் நடத்திய அல்ஷபாப் இயக்கத்தினர் 5 பேர் கொல்லப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com