

இஸ்லாமாபாத்,
ராணுவ கோர்ட்டுகளில் கைபர் பக்துங்குவா சட்டசபை உறுப்பினர் இம்ரான்கான் முக்மாண்ட் உள்ளிட்ட 60 பேரை கொன்று குவித்ததாக 11 பயங்கரவாதிகள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. கொல்லப்பட்டவர்களில் 24 பேர் பாதுகாப்பு படையினர் ஆவர்.
அந்த வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட்டுகள் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என கண்டு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து தீர்ப்பு அளித்தன.
ராணுவ கோர்ட்டு அளித்த தீர்ப்பினை, அங்கு உள்ள சட்டதிட்டப்படி ராணுவ தளபதி உறுதி செய்தாக வேண்டும். அதன்படி 11 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டுகள் விதித்த தூக்கு தண்டனையை ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதை பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.