

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் எடையுள்ள 4 லட்சம் கிட்கேட் (KitKat) சாக்லேட்டுகள், மர்ம கும்பலால் லாரியுடன் சேர்த்து திருடப்பட்டது.
இந்த சாக்லேட்டுகள், பார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு, கார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்பாகும். ஈஸ்டர் பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட் வரிசையை நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால், மத்திய இத்தாலியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மார்ச் 26ஆம் தேதி புறப்பட்ட லாரி, போலந்துக்கு செல்லும் வழியில் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபோன்ற திட்டமிட்ட கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன லாரி மற்றும் சாக்லேட்டுகளை கண்டுபிடிக்க இத்தாலி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த திருட்டு குறித்து கிட்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "காணாமல் போன கிட்கேட் சாக்லேட்டுகள் மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.. ஆனால் இது ஒரு சாகச செயலோ அல்லது ஏப்ரல் 1 முட்டாள்கள் தின நகைச்சுவையோ அல்ல, உண்மையிலேயே 12 டன் கிட்கேட் சாக்லேட்டுகள் திருடு போயுள்ளது. அவை எங்கே சென்றன? என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என கிட்கேட் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம், ஐரோப்பாவில் உணவு பொருட்கள் தொடர்பான பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.