

தெஹ்ரான்
அமெரிக்க நெருக்கடியால் காமேனி இறுதிச்சடங்கில் 13 நாடுகள் பங்கேற்காமல் தவிர்த்துள்ளன என ஈரான் ஊடகம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென்று வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலியானார்கள்.
போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அவரின் இறுதிச்சடங்கு இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சற்று அமைதி நிலவி வருவதால் அயதுல்லாவின் இறுதிச்சடங்கு திட்டமிடப்பட்டது.
இதனை முன்னிட்டு, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கியது. இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும்படி பல்வேறு நாடுகளை அமெரிக்கா வற்புறுத்தி வந்தது என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதற்காக ஒரு விரிவான ராஜதந்திர பிரசாரத்திலும் பல நாட்களாக ஈடுபட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கடந்த ஜூன் 26-ந்தேதி அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளிடம், காமேனி இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்று அந்தந்த நாடுகளிடம் கூறும்படியும், அப்படி பங்கேற்பது அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான எதிரான செயலாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அப்படி பங்கேற்றால், வளர்ச்சிக்கான அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்படும் என பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் தூதர்கள் அந்த நாடுகளை எச்சரித்து உள்ளனர். இதேபோன்று, 5 அரபு நாடுகளிடம் ரூபியோ தனிப்பட்ட முறையில், இந்த விசயம் தொடர்பாக பேசியுள்ளார் என அந்த செய்தி தெரிவிக்கின்றது.
இதன்படி, 3 ஐரோப்பிய நாடுகள், 5 ஆப்பிரிக்க நாடுகள், பெர்சிய வளைகுடாவை சேர்ந்த 2 அரபு நாடுகள் மற்றும் 2 பெரிய கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகள் காமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமலோ அல்லது அதில் தங்களை பிரதிநித்துவப்படுத்தும் அளவை குறைத்தோ கொண்டுள்ளன என அந்த தகவல் தெரிவிக்கின்றது.