

உலகில் மிகவும் பழமையான கடிதம் என்று இதைச் சொல்கிறார்கள்.
19-ம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த படகோட்டி பார்க் பவுலா என்பவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதை நீர் புகாமல் பாட்டிலில் அடைத்து கடலில் மிதக்கவிட்டுள்ளார்.
கடந்த 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதம் சுமார் 48 ஆயிரம் நாட்கள் கடலில் பயணித்துவந்த நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் ஒதுங்கியுள்ளது.
டோன்யா இல்மேன் என்ற பெண் அந்தக் கடற்கரை வழியே நடந்து சென்றபோது, தற்செயலாக இந்த பாட்டிலை கண்டிருக்கிறார். அதை எடுத்துப் பார்த்தபோது உள்ளே கடிதம் ஒன்று இருப்பதையும் அறிந்திருக்கிறார்.
அதன் பின் கடிதத்தை வெளியே எடுத்துப் படித்துப் பார்த்தபோது அதில், கடலில் ஏற்படும் நீரோட்டங்கள் பற்றியும், கார்டிப்பில் தொடங்கிய தங்கள் பயணம் இந்தோனேசியா வரை தொடர்ந்ததாகக் குறிப்பிட்டும் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதற்கு முன்னர் 108 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் ஒன்று பாட்டிலின் உள்ளே இருந்ததே பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது 132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் சிக்கியுள்ள தகவல் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.