

நியூயார்க்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இந்தப் போரினால் உக்ரைன் நிலைகுலைந்து வருகிறது. தங்கள் உயிரைக்காத்துக்கொள்வதற்காக அப்பாவி மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து ஐ.நா. அகதிகள் பிரிவின் உயர் கமிஷனர் பிலிப்போ கிராண்ட்டி கூறுகையில், கடந்த 10 நாட்களில் உக்ரைனில் இருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளனர். என தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நகர்வு இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். போலந்து, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் அகதிகளாக செல்கின்றனர். இதில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைன் நாட்டின் எல்லையை கடந்துள்ளதாக பிலிப்போ கிராண்ட்டி குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, உக்ரைனில் இருந்து இதுவரை 14.5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் அகதிகளாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.