ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 மில்லியன் இழப்பீடு - இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா வழங்கினார்

பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 மில்லியன் இழப்பீடு - இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா வழங்கினார்
Published on

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது தொடர்பான வழக்கில், கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்க வேண்டும் என அப்போதைய அதிபர் சிறிசேனாவுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவிற்கு முன்னதாக, முன்னாள் அதிபர் சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்கப்பட்ட ஜூலை 12-ந்தேதிக்கு முன்னதாக, சிறிசேனா ஜூன் 28-ந்தேதி அன்று 15 மில்லியன் இலங்கை ரூபாய்களை இழப்பீடாக செலுத்தினார். மேலும் ஜூன் 30, 2024 முதல் 10 தவணைகளில் 8.5 மில்லியன் இலங்கை ரூபாயை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com