

டமாஸ்கஸ்,
சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 9 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி அங்கு கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளது. அதன்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று துருக்கி கூறி வந்த நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி சிரியா படையினர் நடத்திய தாக்குதலில் 34 துருக்கி வீரர்கள் பலியானார்கள். இதனால் சிரியாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிய துருக்கி, சிரியா அதிபர் ஆதரவு படை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது.
அதன்படி 2 நாட்களுக்கு முன்பு இத்லிப் மாகாணத்தில் துருக்கி நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சிரியா அதிபர் ஆதரவு படையை சேர்ந்த 26 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாகவும் அதில், சிரியா வீரர்கள் 19 பேர் பலியானதாகவும் போர் கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.