

லண்டன்
கொரோனா தொற்றுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசியானது அனைவருக்கும் பலனளிக்காது என இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்ஹாம் தற்போது தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி லான்செட் என்கிற மருத்துவ இதழ் ஒன்றில் இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்ஹாம் கூறியதாவது:-
முதல் தலைமுறை தடுப்பூசிகள் பூரணமாக இருக்காது. மேலும் அவை தொற்றுநோயைத் தடுக்காமல், அனைவருக்கும் அல்லது நீண்ட காலமாக வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்பும் உண்டு.
இந்த தடுப்பூசிகளில் பல, அல்லது அனைத்துமே தோல்வியடையக்கூடும். 65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் இது முழு வீரியமாக செயல்படும் என்பதற்கான உறுதியின் மீதும் தனது சந்தேகத்தினை எழுப்பியுள்ளார்.
தடுப்பூசிகளுக்கான உலகளாவிய உற்பத்தி திறன் பில்லியன் கணக்கான அளவுகளுக்கு போதுமானதாக இல்லை என்றும், இங்கிலாந்தின் உற்பத்தி திறனில் பற்றாக்குறை நிலவுகின்றது.
உலகம் முழுவதும் தற்போது கெரோனா தொற்றால் 4.39 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 2.97 கோடி மக்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 1.29 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11.66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.