20 கொலைகள்... இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை

இந்திய வம்சாவளியான 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் நேபாளத்தில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
20 கொலைகள்... இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை
Published on

காத்மண்டு,

இந்திய மற்றும் வியட்னாம் நாடுகளை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். ஆசியாவில் 1970-ம் ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரர் என அறியப்பட்டவர். அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் என்றும் அழைக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்தது மற்றும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது ஆகியவற்றுக்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

ஹாங்காங் நாட்டில் இருந்து போலி அடையாளத்துடன் நேபாள நாட்டுக்கு சென்ற சோப்ராஜ், தலைநகர் காத்மண்டுவில் கேசினோ ஒன்றில் வைத்து 30 ஆண்டுகளுக்கு முன்பு, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க குடிமகனான கான்னி ஜோ போரோன்ஜிக் (வயது 29) மற்றும் அவரது கனடா நாட்டு காதலியான லாரண்ட் கேரியர் (வயது 26) ஆகிய இருவரை படுகொலை செய்ததற்காக வெவ்வேறு நாடுகளில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து நேபாள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையானது அடுத்த ஆண்டு செப்டம்பர் 18 உடன் நிறைவுக்கு வரும். எனினும், நேபாள நாட்டு சட்டத்தின்படி, 75 சதவீதம் நிறைவு செய்த மற்றும் சிறைவாசத்தின்போது, நல்ல முறையில் நடந்து கொண்டவர் என்ற அடிப்படையில் விடுவிக்க இடமுள்ளது.

சோப்ராஜ் முன்பே 95 சதவீதத்திற்கும் கூடுதலாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். வயது முதிர்வு மற்றும் திறந்த நிலையிலான இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு நேபாள நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com