

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.
இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். நாட்டில் அமைதியை கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்புடன் கத்தார் நாட்டின் தோஹா நகரில் பல சுற்றுகளாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், தலீபான்கள் தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி கனி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்நாட்டுக்கு பிரதமர் கான் முதன்முறையாக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கான், பேச்சுவார்த்தை நடந்தபோதிலும், வன்முறை தொடர்வது கவனிக்கத்தக்கது.
இதனை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உதவி புரியும் என உறுதி கூறினார். இந்த நிலையில், தலைநகர் காபூலில் வாசிர் அக்பர் கான் மற்றும் ஷார் இ நாவ் உள்ளிட்ட பகுதிகளில் 23 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், பொதுமக்களில் 8 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்து உள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலீபான் அமைப்பு தெரிவித்து உள்ளது.