இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்களை ராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை
Published on

பாரீஸ்,

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.

எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ வீரர்கள் இடையேயான மோதலால் பிரான்ஸ் அரசும் தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் விரைவாக அவர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளது.

இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் இருந்து பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை அரசு விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த வெளியேற்ற நடவடிக்கையில், ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களும் அடங்குவார்கள் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

பிரெஞ்சு அரசின் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, அந்நாட்டின் ராணுவ விமானத்தின் உதவியுடன் நேற்றிரவு, இரண்டு முறை சென்று, திரும்பி பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலரும் வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர் என்று டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சூடானில் இருந்து இந்தியர்கள் சிலர் உள்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் 66 பேரை வெளியேற்றி இருக்கிறோம் என சவுதி அரேபியா அரசும் நேற்று தெரிவித்து இருந்தது.

இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில், சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com