

காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலீபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன. இந்த தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவர். மற்றவர்கள் தலீபான் போராளிகள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவாகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில், நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் கடந்த ஞாயிற்று கிழமை மாலை தலீபான்கள் சென்ற வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.
இதில், ஒரு குழந்தை கொல்லப்பட்டது. இதேபோன்று, தலீபான் இயக்க உறுப்பினர் உள்பட 2 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பொதுமக்களின் வாழ்வு மற்றும் சொத்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என தலீபான்கள் உறுதி அளித்திருந்த சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலாலாபாத் நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உளவு துறை இயக்குனரகம் தெரிவித்தது. உளவு துறை அதிகாரிகள் இலக்காக வைக்கப்படுகின்றனர் என அந்த துறை தலைவர் பஷீர் கூறினார்.
இதன்பின்பு, அந்நாட்டின் ஜலாலாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 4 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. இதில், 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில், முன்னாள் அரசின் எல்லை படையின் தளம் அருகே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 3 பேர் கொல்லப்பட்டனர்.
எனினும், இந்த தாக்குதல்களுக்கான நோக்கம் எதுவும் அறியப்படவில்லை. இதில் உயிரிழந்த அனைவரும் குடிமக்கள் ஆவர். தலீபான் படைகளில் யாரும் கொல்லப்படவில்லை என மாகாண தகவல் மற்றும் கலாசார துறை தலைமை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் இன்று 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் அனைத்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.