

டோக்கியோ,
ஜப்பானின் மேற்கு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஓசகா பகுதியை மையாக கொண்டு ஏற்பட்டது. இதனால், ஒசகா நகரம் அதிர்ந்தது. அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். கியோட்டா உள்ளிட்ட வடக்கு ஜப்பானிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.
நிலநடுக்கத்தால், சில இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. தண்ணீர் குழாய்கள், ஜன்னல் கண்ணாடிகள் போன்றையும் சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தால், 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 12 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தததாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9-வயது சிறுமியும் அடங்குவாள். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 9-வயது சிறுமி உயிரிழந்ததாக ஒசகா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், காலை நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒசகா விமான நிலையத்தில் 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தண்டவாளங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு நடைபெறுவதால், புறநகர் ரயில்சேவை மற்றும் புல்லெட் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.