56வது ஆண்டு திருமண நாளை கொண்டாட சென்ற வயதான தம்பதி உட்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
56வது ஆண்டு திருமண நாளை கொண்டாட சென்ற வயதான தம்பதி உட்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில், லேபாயேட் சதுக்கம் அருகே திடீரென மின்னல் தாக்கியது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து இரவு 7 மணியளவில் நடைபெற்றது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் சிலையின் அருகே அவர்கள் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் அவர்கள் படுக்காயம் அடைந்தனர்.

சம்பவத்தன்று வாஷிங்டன் நகரில் மழை பெய்யத் தொடங்கியதால், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மழையில் நனையாமல் இருக்க, அந்த பூங்காவில் உள்ள மரங்களில் ஒன்றின் கீழ் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கரமாக மின்னல் தாக்கியதில் அவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதை கண்ட அப்பகுதி போலீசார் மற்றும் அவசர உதவி மையத்தினர் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மின்னல் தாக்கியதில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த 29 வயது இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே 76 வயதான ஜேம்ஸ் முல்லர் மற்றும் அவரது மனைவி 75 வயதான டோனா முல்லர் ஆகியோரும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். அவர்கள் இருவரும், தங்களது 56வது திருமண நாளை கொண்டாட எண்ணி அந்த பூங்காவுக்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நிக்ழந்துள்ளது.

இந்த துயர சம்பவம குறித்து அதிபர் மாளிகை பெரும் கவலை அடைந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து தேசிய மின்னல் அமைப்பு ஆராய்ச்சி குழுவின் நிபுணர் கிரிஸ் வேகாஸ்கி கூறியதாவது, வெள்ளை மாளிகை அருகே விபத்து ஏற்பட்ட பகுதியில் 6 ஸ்ட்ரோக் மின்னல் தாக்கியுள்ளது. அதாவது அதீத மின்சாரம் ஒரே புள்ளியில் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதுவும் அரை வினாடி பொழுதில் இது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த விபத்தை ஏற்பட்டது என்று கூறினார்.

இது மட்டுமின்றி அப்பகுதி முழுவதுமே பரவலாக மின்னல் தாக்கி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக மின்னல் தாக்கி உயிரிழப்போர் 21 பேர் என ஆய்வு அறிக்கை சொல்கிறது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோசமான வானிலையால் ஏற்படும் இந்த விபத்து தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. அத்தகைய தருணத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com