

காபூல்,
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலீபான் பயங்கரவாத இயக்கத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் எனவும், அதற்குப் பிரதிபலனாக ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள 5,000 தலிபான் கைதிகளை அரசு விடுதலை செய்யும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கைதிகளை குழுக்களாக பிரித்து விடுதலை செய்து வந்தனர்.
இதில் தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரம் பிணைக் கைதிகளை விடுவித்து விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி சிறைகளில் இருக்கும் மீதமுள்ள தலீபான் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அதிபர் அஷ்ரப் கனி அரசுடன் ஒரு வாரத்துக்குள் பேச தயாராக இருப்பதாகவும் தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி மக்களிடம் உரையாற்றிய அதிபர் அஷ்ரப் கனி கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 400 தலீபான் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என்றும், அவர்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாள் சண்டை நிறுத்தத்தை தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ள நிலையில் அதிபர் அஷ்ரப் கனியின் இந்த பேச்சு அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுவரும் அமெரிக்காவுக்கு விரக்தியை அளித்துள்ளது.