

ஜன்ஜிபார்,
தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் நகரில் இந்தியா மற்றும் தான்சானியா நாடுகளின் 4-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி இரு நாடுகளும் மறுஆய்வு மேற்கொண்டன.
இதுபற்றி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ பயிற்சி, சேவையில் ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த விரிவான அளவிலான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவிக்கின்றது.
இதுதவிர, பயங்கரவாத ஒழிப்பு, அமைதி காப்புக்கான பயிற்சி மற்றும் நுண்ணறிவு தொழில் நுட்பம், இணையதளம் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் திறன் வளர்ப்பு போன்றவற்றில் புதிய விசயங்களை பற்றி இருதரப்பும் விவாதித்தன.
பாதுகாப்பு உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் நோக்கில் இவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில், பாதுகாப்பு ஒத்துழைப்பு குழுவுக்கு இந்தியாவின் இணை செயலாளர் அமிதாப் பிரசாத் தலைமையேற்றார். அவருடைய குழுவில் பாதுகாப்பு துறை மற்றும் இந்திய பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.