குழந்தையை பார்க்கச் சென்றபோது நடந்த கொடூரம்.. காதலனுடன் சேர்ந்து பேராசிரியரை கொன்ற மனைவி

பேராசிரியரின் மனைவி, முன்னாள் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பிரெஸ்மிஸ்லாவ் ஜெசியோர்ஸ்கி. இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் அவர் தனது மனைவியை பிரிந்தார்.
இதனையடுத்து குழந்தைகள் கிரீஸ் நாட்டில் தாயின் பராமரிப்பில் உள்ளனர். எனவே அவர்களை பார்ப்பதற்காக அவ்வப்போது அவர் கிரீஸ் சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில், பிரெஸ்மிஸ்லாவ் தனது குழந்தைகளைப் பார்க்க கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த பிரெஸ்மிஸ்லாவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பிரெஸ்மிஸ்லாவின் முன்னாள் மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்றது தெரிய வந்தது. எனவே அவரது மனைவி, முன்னாள் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






