5 ஜெட் விமானங்கள்... டிரம்பின் சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டிரம்ப் கூறிய விசயங்களை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வாஷிங்டன் டி.சி.,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.
3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, உண்மையில் விமானங்கள் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டன. 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன் என்றார்.
நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது.
சமீபத்தில், ஈரானில் நாங்கள் அணு உலைகளை தாக்கினோம். முற்றிலும் தகர்த்தோம். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போரானது நீண்டு கொண்டே சென்றது. வர்த்தகம் வழியே அதனை நாங்கள் தீர்த்து வைத்தோம்.
நீங்கள் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள போவதில்லை என கூறி போர் ஏற்படாமல் தடுத்தோம் என கூறியுள்ளார். தொடர்ந்து 70-வது நாளாக இதனை அவர் கூறி வருகிறார். இதில், எந்த நாட்டின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்ற விவரங்களை தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.
இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய விசயங்களை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். டிரம்புடன் நீண்டகால நட்புறவில் இருக்கும் பிரதமர், இதுபற்றிய தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.






