உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணம் அடைந்தனர்

உலக அளவில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணம் அடைந்தனர்
Published on

பாரீஸ்,

193 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி உலகமெங்கும் உள்ள 22.75 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவர்களில் பாதிப்பேர் ஐரோப்பியர்கள் (11 லட்சத்து 15 ஆயிரத்து 500-ஐ கடந்து விட்டது) என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். உலக அளவில் கொரோனா தாக்கியதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 600 பேர் குணம் அடைந்தனர்.

பலி என்று பார்க்கிறபோது, உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவில் இந்த எண்ணிக்கை 98 ஆயிரமாக இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்தை நோக்கியும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. இங்கு 59 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்.

ஆசியா கண்டத்தில் இந்த வைரஸ் 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கி உள்ளது. இந்த வைரசால் 6,800-க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில்தான் கொரோனா வைரசின் தாக்கம் குறைவாக இருக்கிறது. இங்கு 19 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 1,016 பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

இந்த புள்ளி விவரம், உலக சுகாதார நிறுவனத்துடன், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தரவுகளையும் பயன்படுத்தி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டது ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com