

புதுடெல்லி,
ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த விபரங்களை வெளியிட்டார்.
உக்ரைன் போரின் பின்னணியில், சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக ரஷிய ராணுவத்தில் மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் துரதிர்ஷ்டவசமாக 51 இந்தியர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துவிட்டதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய அரசின் தீவிர முயற்சிகள் மற்றும் தொடர் பேச்சுவார்த்தைகள் காரணமாக இதுவரை 139 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
ரஷிய ராணுவத்தில் இன்னும் சிக்கியிருக்கும் எஞ்சிய இந்தியர்களையும் விரைவாக விடுவித்து, அவர்களை பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ரஷிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தீவிரமாக பேசி வருகிறது. போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ஆபத்து நிறைந்த வெளிநாட்டு வேலைகளில் சேர்வதை இந்தியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் மீண்டும் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.