ஜோர்டான் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகல்

ஜோர்டானில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகினார்.
ஜோர்டான் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகல்
Published on

அம்மான்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜேர்டானில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இதுவரை 3,85,533 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 5,224 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் அங்கு 8,300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் வெள்ளிக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஜேர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் இன்று காலை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை ஆக்சிஜன் தடைப்பட்டதால் தான் நோயளிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நதீர் ஒபைதத், இன்று பதிவி விலகினார். ஆக்சிஜன் தடைப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஜேர்டான் மன்னர் அப்துல்லா, உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com