கடல்வழியாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்ற 600 அகதிகள் கைது

அகதிகள் குடியேற்றத்துக்கு மத்திய தரைக்கடல் முக்கிய வழியாக உள்ளது.
கடல்வழியாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்ற 600 அகதிகள் கைது
Published on

ஏதென்ஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற பலரும் விரும்புகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே அகதிகள் வருகையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறு அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தின.

இந்த அகதிகள் குடியேற்றத்துக்கு மத்திய தரைக்கடல் முக்கிய வழியாக உள்ளது. இதனால் சட்ட விரோத படகு போக்குவரத்து மூலம் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்தாலும் இந்த சட்ட விரோத குடியேற்றம் தொடர் கதையாக உள்ளது. அதன்படி கிரீஸ் கடற்பகுதியில் போர்ச்சுக்கீசிய நாட்டுக் கொடியுடன் 2 படகுகள் சென்று கொண்டிருந்தன.

அப்போது ஐரோப்பிய கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அவர்கள் அந்த படகுகளை இடைமறித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த படகுகளை கைப்பற்றிய கடலோர போலீசார் அதில் இருந்த 600 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்களை தாயகத்துக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com