

ரியாத்,
சவுதி அரேபியாவுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி இந்தியாவில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றார். அவர் ரியாத் நகரில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் இடையேயான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் பேரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சொந்த நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம். வேறொருவரும் இதுபோன்று செய்தது இல்லை.
கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த சமயத்தில், வெளிநாட்டில் வசிப்போரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மிக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிது. அதுதான் இந்தியா. அதனை உலகம் இன்று பார்த்து கொண்டிருக்கிறது என பேசியுள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கொரோனா பரவலால் பயண தடைகள் விதிக்கப்பட்ட சூழலில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்கும் மிக பெரிய பணி மேற்கொள்ளப்பட்டது.
அதில், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், விசா காலாவதி ஆனவர்கள் கொரோனா சூழலில் புதுப்பிக்க முடியாதவர்கள் மற்றும் அந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவித்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.