

காத்மாண்டு,
நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவெர்பலன்கோச் மாவட்டத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் உள்ள சன்குரே பகுதியை நோக்கி பயணித்த அந்தப் பேருந்து, பனேபா-பர்திபஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையின் ஓரத்திலிருந்த சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்திற்குள் மொத்தம் 24 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரும் மீட்புக்குழுவினரும், பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள துலிகேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.