ஆப்கானிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்கள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பாக்டியா மாகாணம் கரம் மாவட்டத்தில் மச்சல்கோ என்ற மிகப்பெரிய அணை உள்ளது. நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த அணையை பயங்கரவாதிகள் தொடர்ந்து, குறிவைத்து வருகின்றனர். இதனால் இந்த அணையை சுற்றிலும் ராணுவ பாதுகாப்பு சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை மச்சல்கோ அணை அருகே உள்ள ராணுவ பாதுகாப்பு சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ பாதுகாப்பு சாவடியை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 9 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மாகாண தலைநகர் கார்டெசில் உள்ள ராணுவ கோர்ட்டு அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com