

ரபாத்,
மொராக்கோ நாட்டில் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்ப்பது, அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருப்பினும் மருத்துவ காரணங்களுக்காகவும் கஞ்சா செடிகளை பலர் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். எனவே, கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட மசோதா ஒன்று மொராக்கோ நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவ காரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே கஞ்சாவை பயன்படுத்த வேண்டும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற மேல் சபையும் இதற்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.