

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையை பார்வையிடுவதற்காக சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் ஞாயிற்று கிழமை தொடங்கியது. இதில் 4 சிறுவர்கள் முதலில் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று நேற்று மற்றுமொரு 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்தது. இன்னும் 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
இதுவரை மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் நல்ல நிலையில் உள்ளது என பொது சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர செயலர் ஜெசடா கூறியுள்ளார்.
தற்போது குகைக்குள் மேலும் 4 சிறுவாகளும், அவாகளது கால்பந்து பயிற்சியாளரும் மட்டுமே சிக்கியுள்ளனா. அவர்களை மீட்பதற்கு மேலும் ஒருநாள் தாமதமாகலாம் எனவும், ஆனால் அவர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் குறித்து உறுதியான பதில் அளிக்க மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் தொடர்பிலும் பெற்றோருக்கும் தகவல் அளிக்க மறுத்துள்ளனர்.
குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி எவ்வளவு கடுமையானது என்பதை விளக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. எட்டு சிறுவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களை மீட்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த வீடியோக்கள் காட்டுகின்றன. மிக நெருக்கமான இடைவெளிகளின் வழியாக ஆக்சிஜன் சிலிண்டரையும் தூக்கிக் கொண்டு முதலில் சிலிண்டரை இடைவெளி வழியாக தள்ளி விட்டு பின்னர் மீட்பு படை வீரரோ அல்லது மீட்கப்படுபவர்களோ வெளியேற வேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கி, பாறை இடுக்குகளில் நுழைந்து மீட்பு படை வீரர்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தால் அவர்களது பணி எவ்வளவு கடினமானது என்பது புரிகிறது. வீடியோக்களைப் பார்க்கும்போது இந்த மீட்பு படை வீரர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று தோன்றுகிறது.