

தைப்பே,
நம்மூரில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என கூறுவார்கள். கணவன் பெயரை கூறுவதற்கு கூட, மனைவி தயங்கிய காலங்களும் இருந்துள்ளன. ஆனால், நிலைமை தற்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அன்புடன் போடா, வாடா என கூறும் மனைவியரும் உள்ளனர்.
நம்முடைய நாட்டில் நிலைமை இப்படி என்றால், வெளிநாட்டில் வேறு விதத்தில் நடந்து கொள்ளும் மனைவிகளும் உள்ளனர். விசித்திரம் நிறைந்த தம்பதிகளும் காணப்படுகின்றனர். தைவான் நாட்டில் வசித்து வருபவர் ஹாவோ. இவருடைய மனைவி ஜுவான்.
2014-ம் ஆண்டில் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 3 ஆண்டுகளாக எந்தவித தொந்தரவும் இன்றி வாழ்க்கை சென்றது.
இந்த நிலையில், மனைவி பற்றிய திடுக்கிடும் குற்றச்சாட்டை கணவர் முன் வைத்துள்ளார். அது 2017-ம் ஆண்டில் இருந்து தொடங்கியுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை பாலியல் உறவுக்கு அனுமதி என மனைவி ஜுவான் நிபந்தனை விதித்து இருக்கிறார். 2019-ல் ஒட்டு மொத்தத்திலும் கணவரை நிராகரித்து இருக்கிறார். அதற்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.
இதன்பின் நிலைமையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. 2021-ல் தன்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது பாலியல் உறவு கொள்ள விரும்பினாலோ அதற்கு பணம் தர வேண்டும் என கூறி கணவரிடம் கட்டணம் வசூலித்து உள்ளார்.
இதுபற்றி கணவர் ஹாவோ கூறும்போது, என்னை பற்றி ஜுவான் அவருடைய உறவினர்களிடம் தவறாக பேசியுள்ளார். ரொம்ப குண்டாக இருக்கிறேன் என்றும் ஒரு வேலையை நல்லவிதத்தில் செய்ய போதிய திறன் இல்லாதவர் என்றும் கூறியுள்ளார் என குறையாக கூறினார். இதனை தொடர்ந்து, ஹாவோ அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
2021-ம் ஆண்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இதனால், மனைவி அதிர்ச்சியடைந்து உள்ளார். உறவு மேம்படும் வகையில் நடந்து கொள்வேன் என கணவரிடம் உறுதியளித்து இருக்கிறார். இதனால், கணவர் வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார்.
ஆனால் அதன்பின் மனைவியின் போக்கு முற்றிலும் மாறியுள்ளது. ஹாவோவை உணர்வுரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார். பாலியல் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது பேச வேண்டும் என்றாலோ கூட 15 டாலர் (ரூ.1,200) வசூலித்திருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த ஹாவோ இந்த ஆண்டில் மனைவிக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றதுடன், விவாகரத்தும் கோரியிருக்கிறார். 2 ஆண்டுகளாக இருவரும் பேசி கொள்ளவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இருவரும் மெசேஜ் செயலி வழியே தகவல் தொடர்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த தம்பதி திருமண கவுன்சிலிங்கிற்கும் சென்றுள்ளது. ஆனால் அதில் பலனில்லை.
சமீபத்தில் தைவானில் உள்ள கோர்ட்டு ஒன்றில் ஹாவோவுக்கு விவகாரத்து வழங்கியது. இந்த உறவுமுறை தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்திருக்கிறது என கோர்ட்டு தெரிவித்தது. எனினும், மனைவி ஜுவானுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
அந்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் பல முறை நடந்திருக்கிறது என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.
2014-ம் ஆண்டில், மனைவி ஒருவர் கணவரிடம் பாலியல் உறவு வேண்டுமென்றால் 60 டாலர் (ரூ.5 ஆயிரம்) பணம் தர வேண்டுமென கேட்டிருக்கிறார். உரையாடுவதற்கும், உணவு தரவேண்டும் என்றாலும் அதற்கும் கட்டணம் நிர்ணயித்து இருக்கிறார்.
ஏனெனில் லாரி ஓட்டுநரான கணவர், குடும்பத்திற்கென எந்த செலவும் செய்வதில்லை என காரணம் கூறியிருக்கிறார். அந்த தம்பதியின் குழந்தைகளும், தங்களிடம் பேச விரும்பினால் பணம் கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
இதன்பின் இந்த தம்பதி காவலர்களிடம் சென்றுள்ளது. இதில், குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 600 டாலர் (ரூ.50 ஆயிரம்) தருவதற்கு அந்த கணவர் சம்மதித்து இருக்கிறார். அதனுடன் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.