ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

போர்க்களம் போல...

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில 5.9, 5.5 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்களும் அங்கு உணரப்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிரம்பி வழிந்த ஆஸ்பத்திரிகள்

இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. முதலில் இந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல ராக்கெட் வேகத்தில் இதன் எண்ணிக்கை உயர்ந்தது.

மனிதாபிமான உதவி

தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்ய மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் முன்வந்துள்ளன. அதன் ஒருபகுதியாக சீன செஞ்சிலுவை சங்கம் சார்பில் சுமார் ரூ.1 கோடியே 66 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணியில் உதவுவதற்காக 10 மீட்பு குழுவினரும் சீன செஞ்சிலுவை சங்கம் அனுப்பி உள்ளது. எனவே தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com