

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிரமாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் திடீரென தாக்குதலை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது. ஆனால், எதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அந்த நாடு விளக்கமளிக்கவில்லை.
எனினும் ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை முழுமையாக நீடிப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவற்றைத் தாக்கும் ஈரானும், அதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும் பேச்சுவார்த்தை வழியிலான தீர்வையே விரும்புகிறார். இதை அவர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், உண்மையான நோக்கத்துடனும், தீர்வை எட்டும் எண்ணத்துடனும் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், என்ன நடக்கும் என்பதை ஈரானுக்கு அவர் காண்பித்துள்ளார்.தற்போதைக்கு ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் திட்டத்தில் இருந்து பின்வாங்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
மோதலை விரிவுபடுத்துதல், ஆயுத கையிருப்பு குறைவு, எரிசக்தி விநியோகம் பாதித்தல் உள்ளிட்டவை குறித்து டிரம்ப் அடைந்துள்ளார். அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், முப்படை தலைமைத் தளபதி டான் கெயின் ஆகியோர் டிரம்ப்பிடம் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளன. ஆயுதங்கள் பற்றாக்குறை காரணமாகவே டிரம்ப் தாக்குதல் நிறுத்தம் செய்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.