

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ மேலாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் 'ஆண்டன் லேப்ஸ்' என்ற நிறுவனம், சோதனைக் கடை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த கடையை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு, 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் கிளாட் தொழில்நுட்பத்தில் இயங்கும் 'லூனா' என்ற ஏஐ மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பிடிவாரண்ட் கொடுத்த ஏஐ இந்த கடையில் பணிபுரிந்து வந்த மனித ஊழியர் ஒருவர், தொடர்ந்து பணிக்குத் தாமதமாக வந்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் வேலை பார்த்த 23 ஷிப்ட்களில், 17 முறை தாமதமாக வந்ததை லூனா ஏஐ துல்லியமாகக் கண்காணித்துப் பதிவு செய்துள்ளது. ஊழியரின் இந்த அலட்சியப் போக்கால் கடையின் செயல்பாடுகள் மற்றும் லாபம் பாதிக்கப்படுவதை ஏஐ கணக்கிட்டது.
தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் ஊழியர் மாறாததால், அவரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிறுவனத்தின் மனித உயர் அதிகாரிகளுக்கு 'லூனா' ஏஐ பரிந்துரை கடிதம் அனுப்பியது. ஏஐ மேலாளரின் தரவுகள் மற்றும் நினைவகக் குறிப்புகளை ஆய்வு செய்த மனித அதிகாரிகள், அந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்தச் சம்பவம் வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைத் திருடுவது ஒருபுறமிருக்க, இப்போது மனிதர்களை வேலைக்கு வைப்பதும், தூக்குவதும் ஏஐ கைகளுக்குச் சென்றுவிட்டதோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.